Skip to content

மனதை FORMAT செய்யுங்கள்

காம்கேர் புவனேஸ்வரி எழுதிய மனதை FORMAT செய்யுங்கள் - மன அழுத்தத்தைக் குறைத்து, வாழ்க்கையை மேம்படுத்தும் வழிகாட்டி! சுய முன்னேற்றம் மற்றும் உறவுகளை வலுவாக்கும் புத்தகம்.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 216
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இந்தியா ஓர் இளமை தேசம். புத்தம் புதிதாய்ப் பிறப்பெடுத்தபோதே அகிம்சையையும் சமூக நீதியையும் தன் சுவாசமாகக் கொண்டு உலகை வியக்கவைத்த அதிசய பூமி. தத்தித் தவழ்ந்து கம்பீரமாக வளர்ந்து நிற்கிற அது இன்று வல்லரசுக் கனவுகளுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது.

அன்றாட வாழ்க்கையின் சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் ஒரு மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பது கொள்கைரீதியாக, கலாச்சாரரீதியாக, பொருளாதாரரீதியாக அவனுக்குள் பரவிக்கிடக்கும் முரண்களையும், தாண்டி இந்த சமூகத்துடன் ஒருங்கிணைந்து சமன்பாடுகளுடன். வாழ அவன் கைக்கொள்ளும் வழிமுறைகளும் அசாத்தியப் பிரயத்தனங்களும்தான்.

ஐன்ஸ்டீன் அணுசக்தியை கண்டுபிடிக்கையில் அதன் ஆக்கப்பூர்வமான பயன்பாட்டால் மனிதவாழ்வே தலைகீழாகப் புரட்டிப்போடப்படப் போகிறது என்று அப்பாவித்தனமாகக் கற்பனை செய்திருந்தார். ஆனால் ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் அவர் நித்திரையை நிரந்தரமாகக் கலைத்தன. கலைத்தன. அதற்குப் பிறகு அவரது தூக்கமும் தொலைந்துபோனது.

மனித சிருஷ்டியின் அடுத்தகட்டம் கணினி, இணையம் சார்ந்ததாக இருக்கிறது. நாளைய உலகின் யுத்தங்கள் வான், கடல்மார்க்கமானவையாகவோ-பகிரங்கமாக உலக வரைபடத்திலுள்ள எல்லைக்கோடுகளை சிதைத்து மாற்றியமைக்கும் எண்ணம் கொண்ட ஒன்றாக இல்லாமல் கட்டற்ற சுதந்திரத்தின் தூதுவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு புன்சிரிப்போடு ஒரு கையால் தழுவும் அதே நேரத்தில் பின்புறம் உட்சபட்ச வேகத்தில் சத்தமில்லாமல் பிறரின் மொழி, இனம், கலை சார்ந்த அடையாளங்களை துடைத்தெறிந்துவிட்டு தன்னுடையதை அங்கே நிறுவுவதாகவே அமையும். இந்தச் சூழலில் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதைப் போதிக்கிறது இந்தப் புத்தகம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி M.Sc., Computer Science, M.B.A. பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆகக் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார்.

பல முறை அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்டுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அங்கு அவர் தயாரித்த 'உயர்கல்வியில் இந்திய கல்வி முறைக்கும், அமெரிக்க கல்வி முறைக்குமான ஒப்பீடு’ என்ற ஆவணப்படம் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் பல கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் கருத்தரங்குகளில் உரையாடி மாணவர்களுக்கான ஊக்கசக்தியாகவும் இருந்து வருகிறார்.

இவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தில், மாறிவரும் பொருளாதாரக் கொள்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், கலாச்சார பரிமாற்றங்கள் எப்படியெல்லாம் நம் வாழ்க்கைமுறையை பாதிக்கின்றன, அவற்றில் எவை மேம்பாட்டுக்குரிய திருப்பங்கள், எவை திணிப்புகள் என்பதைக் கூர்ந்து கவனித்து வருபவர்.

வெற்றி என்பது சுயம், குடும்பம், சமூகம் ஆகிய மூன்று பரிணாமங்கள் கொண்ட ஒரு நிகழ்வு. வேகமாக பல விஷயங்களைக் கற்றுணர்ந்து, கிரஹித்து செயல்பட வேண்டிய சூழலில் நம் மனதில் பயனற்ற குப்பைகள் சேர்வதைத் தவிர்க்க முடியாது. அதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறோம்.

மனதை Format செய்யக் கற்றுக்கொண்டால் நம்மால் திறம்பட செயல்பட முடியும், மனித உறவுகள் மேம்படும் என்பதை தன் சொந்த அனுபவங்களில் இருந்தும், நடப்பு நிகழ்வுகளில் இருந்தும் மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர். படித்துப் பயனடைந்தால் நம் மனம் பலமானதாக நம் வெற்றிகளுக்கெல்லாம் சிறந்த பாலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.