Skip to content

ஒற்றை பகடையில் எஞ்சும் நம்பிக்கை

கீதா சுகுமாரன் எழுதிய ஒற்றை பகடையில் எஞ்சும் நம்பிக்கை - கவிதைகள், நம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் தத்துவங்களை ஆழமாகப் பேசும் ஒரு சிறந்த படைப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 80
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

கீதா சுகுமாரனின் கவிதைகளிலுள்ள சில பிம்பங்களை, தெறிக்கும் சில சொற்களை, புதைந்த மௌனத்தை மட்டும் பிடித்துக்கொண்டு கவிதைகள் முழுவதிலும் முங்கி நீந்தி வரமுடியும். நீந்தும்போது பாதி கிழிந்த சிவப்புச் சீலையுடன் ஒற்றைப் பகடையில் ஊசலாடும் நம்பிக்கையுடன் நிற்கும் தமயந்தியை அல்லது பேயுருக்கொண்ட காரைக்கால் அம்மையாரைக் கடந்து போகலாம்.

சீதையிடம் உரையாடும் நல்லதங்காளை எதிர்கொள்ளலாம் அல்லது “நான் யார்?” என்ற கேள்வியை எழுப்பும் கும்பகர்ணனின் மனைவியை, ஆணுக்கும் பசலை நோய் வரவேண்டும் என்று நினைக்கும் ஆதிமந்தியை, வனவாசம் முடிந்து வந்ததும் விட்ட தூக்கத்தைப் பிடிக்க ஓடும் லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளையை எல்லோரையும் அறிமுகம் செய்துகொள்ளலாம்.

முற்றும் எதிர்பாராத தருணத்தில், அஸ்பரகஸ் கூட்டு செய்யும், பனியைத் தழுவி தேகம் எரியும், எஸ்ரா பவுண்டையும் ஸில்வியா ப்ளாத்தையும் படிக்கும், காதல் கத்தியாய் தன் உடலில் இறங்குவதைச் சொல்லும், கனவிலி, முகமிலி, பெயரிலிப் பெண்களின் அக வெளிகளுக்குள் நுழையலாம். அக்கரையை எட்டிய பின் மீண்டும் இக்கரை வரை நீந்த வேண்டிவரும் ஒரு சொல்லையோ, ஒரு பிம்பத்தையோ தேடியபடி. நீச்சல் தெரியாதவர்களை இழுத்துக்கொள்ளும் சுழிகளும் உண்டு. உயிர் பறிக்காத சுழிகள்.

-அம்பை