Skip to content

போர் தொடர்கிறது

அகஸ்டோ ருவா பஸ்டோஸ் எழுதிய போர் தொடர்கிறது - லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் சிறந்த படைப்பு, நாட்டுப்புறச் சூழலில் போர் மற்றும் மனித உறவுகளைப் பேசுகிறது.

Category Novel
Tags History, Politics, and Culture

Description

உலகப் புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க இலக்கிய மேதைகளான கார்லோஸ் ஃபுயண்டஸ், யோஸே லெஸாமா லிமா, பாப்லோ நெரூதா போன்றோரின் சமகாலத்தவரான அகஸ்டோ ருவா பஸ்டோஸ் (பராகுவே) எழுதிய - Hijo de Hombre (Son of Man) என்னும் தலை சிறந்த நாவலை, எஸ். பாலச்சந்திரன் அவர்களின் மொழிபெயற்பில், ‘போர் தொடர்கிறது’ என்ற தலைப்பில் தமிழில் வெளிக்கொணர்வதில் சிந்தன் புக்ஸ் பெருமகிழ்ச்சியடைகிறது.

அகஸ்டோ ருவா பஸ்டோஸ் தனது நாட்டின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைத் தற்கால நிகழ்வுகளுடன் இணைத்து, நாட்டுப்புற மக்களின் வழக்காறுகளை, பூர்வீக அமெரிக்க இந்தியர்களின் ‘குவாரானி’ மொழியின் ஜீவத்துடிதுடிப்போடு குழைத்து, மிகச் சிறந்த நாவல்களை உலகிற்கு அளித்தவர். பழங்குடி மக்களின் போர்க்குணத்தை அற்புதமாகச் சித்திரிக்கும் போர் தொடர்கிறது என்னும் இந்நாவலில் யதார்த்தவாதத்தின் சாத்தியமான எல்லைகள் அனைத்தையும் தொட்டவர், அவற்றைக் கடந்து செல்லவும் முயன்றவர். இந்நாவலைத் தவிர Thunder in the Leaves, I the Supreme, The Prosecutor உள்ளிட்ட பல நாவல்களையும் எழுதியவர். மாஜிக்கல் ரியலிசம் என்னும் இலக்கிய வடிவத்தை வெற்றிகரமாக கையாண்ட முன்னோடி நாவலாசிரியர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர்.

தனது நூல்கள் தேசிய மரபுச் சொத்தாக மதிக்கப்பட்டு, அரசின் கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் பாட நூல்களாக வைக்கப்பட்ட அதே நேரத்தில், அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தனது எழுத்துக்களில் கண்டனம் செய்த காரணத்தால் நாடு கடத்தப்பட்டு, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை வெளி நாடுகளிலேயே கழிக்க வேண்டிய, வேதனையும் விசித்திரமும் நிறைந்த அனுபவம் அவரைத்தவிர, உலகில் வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்க முடியாது.