Skip to content

மர்மரியா

பெஜோ ஷைலின் எழுதிய மர்மரியா - தனிமனித உளவியல், வரலாறு மற்றும் சமூக விமர்சனத்தை உள்ளடக்கிய ஒரு யதார்த்த நாவல். தமிழ் நாவல்கள் விரும்பிகளுக்கு ஒரு சிறந்த புத்தகம்.

Category Novel
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2023
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தற்காலத் தமிழ் நாவல்களைக் கதை சொல்லும் நாவல்கள் எனவும், பிரதியாக்கம் செய்யப்பட்ட நாவல்கள் எனவும் இரண்டு விதங்களில் எளிதாக வகைப்படுத்தி விடலாம். கதை சொல்லும் நாவல்களில் வெறும் கதை மட்டுமே இருக்கும். வரிசைக் கிரமத்தில் ஒரு ஊரை முன்வைத்து, கதைத் தலைவனை முன்வைத்து, வரலாற்றை முன்வைத்து, மதத்தையோ சாதியையோ முன்வைத்துக் கொஞ்சம் கதைவிடத் தெரிந்தால் உடனே கதை சொல்லும் நாவலை எளிதாக எழுதிவிடலாம்.

‘மர்மரியா’ கதை சொல்லும் நாவல் அல்ல. அதில் உட்பொதிந்த கதைகள் பல இருந்தாலும் ஒற்றை மனநிலையில் படைக்கப்படும் யதார்த்த நாவலின் தளத்தை அது எங்குமே கடைபிடிக்கவில்லை. மணலில் புழு ஊர்ந்து செல்வது போல, ஆற்றில் ஓர் இலை விழுந்து நகர்வது போல, வரிசையாக எறும்புகள் அணிவகுப்பது போன்ற எழுத்துமுறையை வரிந்து கொள்ளாமல் பல மனநிலைகளில் உலகைப் பிரதியாக்கம் செய்கிறது.

‘மர்மரியா’ நாவலை வரலாறாக வாசிக்கலாம். கரைக்கோடு என்ற ஊரின் இடவரலாறாக வாசிக்கலாம். தனிமனித உளவியலாக வாசிக்கலாம். நிறுவனங்கள் மீதான எதிர்ப்பாக வாசிக்கலாம். வரலாற்றை அழித்தெழுதும் வரலாறாக வாசிக்கலாம். தனிமனித விருப்புவெறுப்புக்களாகவும் வாசிக்கலாம்.

நீதி என்பதே அருவருப்பான பொய், போராட்டம் பொய், கல்வியைவிட பாத்ரூம் எழுத்துக்களே சிறந்தவை, இராணுவ எதிர்ப்பு, தேசப்பற்று மீதான எள்ளல் போன்ற எல்லா விதமான கலகக்குரல்களும் வாசிக்கச் சுவையான கேலிகளாக, சாதாரணப் பேச்சு மொழியில் விரிவதே இந்த நாவலின் தனிச்சிறப்பு எனலாம்.

வட்டார மொழியை யதார்த்தம் தாண்டியும் பயன்படுத்த முடியும் என்பதைத் தமிழில் எடுத்துச் சொல்லும் முதல் நாவல் இதுவென்பேன்.

- குமாரசெல்வா